ஷா ஆலம், செப் 26– டுசுன் துவா தொகுதியில் உள்ள இரு கிராமங்களுக்கு காஜாங் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் துப்புரவு பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்ட அனைத்துலக நதிகள் தினத்தை முன்னிட்டு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எர்டி பைசால் எடி யூசுப் கூறினார்.
“ரிவர் கேர்“ திட்டத்தின் கீழ் புல் வெட்டும் கத்திரிக்கோல், குப்பை அள்ளும் சாதனம், மறுசூழற்சி குப்பைத் தொட்டிகள், குப்பை சேகரிக்கும் பிளாஸ்டிக் பைகள், தள்ளுவண்டி, வறண்டி உள்ளிட்ட பொருள்கள் அவ்விரு கிராமங்களுக்கும் வழங்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
டுசுன் துவா, பத்து 9 மற்றும் பத்து 16 இல் உள்ள கம்போங் சுங்கை ராயா சமூக நிர்வாக மன்றத்தின் பிரதிநிதிகளிடம் இந்த பொருள்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஆற்றில் துப்புரவு பணியை மேற்கொள்ள தொடக்கத்தில் திட்டமிட்டிருந்தோம். எனினும், கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது என்றார் அவர்.