ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

கோல சிலாங்கூரில் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் புதன்கிழமை வரை நடைபெறும்

ஷா ஆலம், செப் 26- கோல சிலாங்கூர் விளையாட்டுத் தொகுதியின்  உள்ளரங்கில் இளையோருக்கான கோவிட்-19  தடுப்பூசி இயக்கம் இம்மாதம் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பதினாறு மற்றும் பதினேழு வயதினரை இலக்காக கொண்ட இந்த தடுப்பூசி இயக்கம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று கோல சிலாங்கூர் மாவட்ட சுகாதார இலாகா சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

தடுப்பூசி பெற விரும்பும் இளையோர் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும். அவர்கள் அடையாளக் கார்டை உடன் கொண்டு வரவேண்டும் என்பதோடு தடுப்பூசி பெறுவதற்கான ஒப்புதல் பாரத்திலும் கையெழுதிட வேண்டும். மேலும், வருகைக்கான முன்பதிவின்றி வருவோர் இம்மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட பள்ளிகள் நிர்ணயித்துள்ள முன்பதிவு நேரத்தின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தடுப்பூசி பெற முடியும் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

இந்த தடுப்பூசி இயக்கம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 03-32812309  அல்லது  013-8910041 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்தாண்டு பள்ளித் தவணை தொடங்குவதற்குள் 80 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி செய்ய சுகாதார அமைச்சு இலக்கை நிர்ணயித்துள்ளது.


Pengarang :