ஷா ஆலம், செப் 26- குழாய் உடைந்த காரணத்தால் கோம்பாக் வட்டாரத்தில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று காலை 10.00 மணியளவில் 63 விழுக்காட்டு பகுதிகளில் சரி செய்யப்பட்டது.
அம்பாங் பாய்ண்ட் மேம்பாலம் அருகே நேற்று குழாய் உடைந்த காரணத்தால் கோம்பாக் வட்டாரத்தின் 41 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
இன்னும் 15 பகுதிகளில் நீர் விநியோகம் சரி செய்யப்படவில்லை எனக் கூறிய அந்நிறுவனம், இடங்களின் அமைப்பு மற்றும் தொலைவைப் பொறுத்து நீர் விநியோகம் எப்போது கிடைக்கும் என்பது தீர்மானிக்கப்படும் என தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோக வழக்க நிலைக்கு திரும்புவதை உறுதி செய்யும் நடவடிக்கை திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக இதர பகுதிகளில் உள்ளவர்கள் நீரை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டுமாய் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.
இந்த நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலை அயர் சிலாங்கூர் நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தது.