ஷா ஆலம், அக் 5- தென்கிழக்காசியாவில் மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக கிள்ளான் பட்டியலிடப்பட்டுள்ளதாக இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலை சிலாங்கூர் மாநில போலீஸ் துறை மறுத்துள்ளது.
நம்பியோ எனும் அந்த ஊடகம் வெளியிட்ட அச்செய்தியை மறுத்த சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது, அந்த ஊடகம் வெளியிட்ட செய்தி தவறானதாகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதோடு அதன் குற்றச்செயல் மற்றும் பாதுகாப்பு குறியீட்டின் நம்பகத்தன்மையும் கேள்வியெழுப்பும் வகையில் உள்ளது என்றார்.
மேலும், அந்த ஊடகம் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை கிள்ளான் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் சொன்னார்.
இம்மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சொத்துக்கள் தொடர்பான குற்றச்செயல்களின் எண்ணிக்கை 13 விழுக்காடாகவும் பலாத்காரம் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் 6 விழுக்காடாகவும் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
கிள்ளான் மாவட்டத்தைப் பொறுத்த வரை குற்றச்செயல்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தொடக்க நிலை மதிப்பிட்டின்படி 163.68 சம்பவங்களுக்கும் கீழ் அதாவது 8 விழுக்காடாக இருந்தது என்றார் அவர்.
அந்த ஊடகம் வெளியிட்ட தகவல் நம்பகமான தரவுகளையும் குற்றச்செயல்கள் தொடர்பான உண்மை விபரங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதால் அச்செய்தி குறித்து பொதுமக்கள் கலக்கமோ கவலையோ அடையவேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.