கோலாலம்பூர், அக் 9- மாநில எல்லைகளைக் கடக்க அரசாங்கம் அனுமதித்தால் தினசரி 11 லட்சம் முதுல் 13 லட்சம் வரையிலான வாகனங்கள் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் என்று பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
நாட்டில் 90 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெறும் பட்சத்தில் பொதுமக்கள் மாநில எல்லைகளைக் கடக்க அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக தங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் இருக்கும் கிள்ளான் பள்ளத்தாக்குவாசிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுவர் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியது.
மாநில எல்லை கடப்பதற்கான அனுமதி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வாகன அதிகரிப்பை எதிர்கொள்ள பிளஸ் நிறுவனம் தயாராக உள்ளதாக பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஜக்காரியா அகமது ஜபிடி அறிக்கை ஒன்றில் கூறினார்.
மாநில எல்லையைக் கடப்பதற்கான தடை நீங்கியவுடன் வாகனங்களின் அதிகரிப்பை எதிர்கொள்ள வட மற்றும் தென் பிராந்தியத்திலுள்ள அனைத்து 94 டோல் சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பான பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதோடு தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்த எஸ்.ஒ.பி. விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார்.