ஷா ஆலம், அக் 13- லங்காவி தீவுக்கு சுற்றுலா செல்வோர் இனியும் கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ கைரி ஜமாலுடின் கூறினார்.
மாநில எல்லைகளைக் கடக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாக பிரதமர் கடந்த 10 ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து லங்காவி தீவுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதற்கான அவசியத்தை மறு ஆய்வு செய்ய அமைச்சு முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் கோவிட்-19 பரிசோதனை நடத்துவதை நிறுத்த சுகாதார அமைச்சு முடிவெடுத்துள்ளது. அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முதல் லங்காவி செல்லும் சுற்றுப்பயணிகளுக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்வது நிறுத்தப்படுகிறது என்றார் அவர்.
எனினும், 18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து சுற்றுப்பயணிகளும் அவசியம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் தொடர்ந்து அமலில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் அல்லது கோவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுற்றுலா மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
காய்ச்சல், இருமல், சளி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது என்றும் அவர் ஆலோசனை கூறினார்.