ஷா ஆலம், அக் 14- கிள்ளான், ஜாலான் கெபுன் நெனாஸ் மற்றும் ஜாலான் பாப்பானில் பொருத்தப்பட்ட 10 கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) சட்டவிரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கையை முறியடிப்பதில் பேருதவி புரிந்துள்ளன.
ஜாலான் கெபுன் நெனாசில் ஆறு கேமராக்களும் எஞ்சிய கேமராக்கள் ஜாலான் பாப்பானிலும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பொருத்தப்பட்டதாக கிள்ளன் நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்சில் அகமது தாஜூடின் கூறினார்.
சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதற்காகவும் பொதுமக்களுக்கு சுத்தமான மற்றும் சௌகர்யமான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தி தருவதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
சி.சி.டி.வி. பொருத்தும் நடவடிக்கை தவிர்த்து நகராண்மைக் கழகத்தின் சுற்றுச் சூழல் துறை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதோடு தடுப்பு நடவடிக்கைகளை சமூகத்துடன் இணைந்து மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக ஜாலான் கெபுன் நெனாசில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி கூறியிருந்தது.