கோலாலம்பூர், அக் 15– நாட்டில் கோவிட்-19 நிலவரம் மேம்பாடடைந்து வருவதை கருத்தில் கொண்டு நாட்டின் எல்லைகளைத் திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
முழுமையாக தடுப்பூசி பெற்ற சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளை கட்டாய தனிமைப்படுத்துதல் நிபந்தனைக்கு உட்படுத்தாமல் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
வேறு சில நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளதைப் போல் தடுப்பூசி சான்றிதழை அடையாளம் காணும் பரஸ்பரத் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெற்ற தேசிய மீட்சி மன்றத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு விவகாரங்களில் அந்நிய நாட்டு பிரஜைகளை அனுமதிப்பதும் அடங்கும் என்றார் அவர்.
நாட்டின் எல்லைகளைத் திறப்பது ஒரு சாதகமான மேம்பாடாகும். இதன் வழி பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பாக சுற்றுலா, அனைத்துலக மாநாடுகள் போன்ற புத்துயிர் பெறவும் வர்த்தக மற்றும் சுற்றுலா நோக்கத்திற்காக நாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இயலும் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தமக்கு விளக்கமளித்தாகவும் நடப்பு மேம்பாடுகள் குறித்து குறிப்பாக, தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை குறைவது, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் பயன்பாடு குறைந்தது மற்றும்தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவது கண்டு தாம் மனநிறைவு கொள்வதாக அவர் தெரிவித்தார்.