ஷா ஆலம், அக் 16- மின்- அழைப்பு உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள சுங்கை காண்டீஸ் தொகுதியைச் சேர்ந்த 100 பேர் சிலாங்கூர் அரசின் ரோடா டாருள் ஏசான் (ரைட்) திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த திட்டத்தில் பங்கேற்றதன் வழி மோட்டார் சைக்கிள்களைப் பராமரிப்பற்கும் அன்றாட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கும் தேவையான உதவிகளை அவர்கள் பெற முடியும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி முகமது முக்னி கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு உதவித் திட்டங்களில் இந்த ரைட் திட்டமும் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.
சுங்கை காண்டீஸ் தொகுதி ரைட் திட்ட பங்கேற்பாளர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். ஜாலான் கெபுனில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் தலைமை தாங்கினார்.
ரைட் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி முதல் டிசம்பர் வரை htttps://msnselangor.gov.my. எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
மூவாயிரம் இளைஞர்களை இலக்காக கொள்ளப்பட்டு இந்த ரைட் திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.