சபாக் பெர்ணம், அக் 19- சாலையைப் பயன்படுத்துவோரின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக 7 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான மூன்று அடிப்படை வசதித் திட்டங்கள் சபாக் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஜாலான் செமனானஞ்சோங் பெர்ணம் தொடங்கி ஒருங்கிணைந்த தங்குமிட வசதி கொண்ட பள்ளி வரையிலான 2 கிலோ மீட்டர் சாலைத் திட்டம் அடுத்தாண்டு மார்ச் மாதம் முற்றுப்பெறும் என்று அடிப்படை வசதிகள் குறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
கோல சிலாங்கூர் சாலை சந்திப்பிலிருந்து பாரிட் அம்பாட் தீமோர் வரையிலான சாலையை தரம் உயர்த்தும் பணிக்கான வடிவமைப்பு மற்றம் நில மீட்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜாலான் சுங்கை லீமாவ் முதல் ஜாலான் பஞ்சாங் பெடேனா வரையிலான 200 மீட்டர் நீளம் கொண்ட சுங்கை பெசார் பாலத்தை தரம் உயர்த்தும் பணிகள் வரும் 2023 ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும் அவர் சொன்னார்.
இந்த திட்ட அமலாக்கத்தின் மூலம் பெக்கான் சுங்கை புசாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்பதோடு வாகனமோட்டிகளுக்கு பாதுகாப்பான சாலை வசதியையும் ஏற்படுத்தி தர முடியும் என அவர் குறிப்பிட்டார்.
சுங்கை ஆயர் தாவார் மற்றும் ஊத்தான் மெலிந்தாங்கை இணைக்கும் இரண்டாவது சுங்கை பெர்ணம் ஆற்றின் கட்டுமானத் திட்ட பகுதிக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.