சபாக் பெர்ணம், அக் 20- சுங்கை ஆயர் தாவார் மற்றும் பேராக் மாநிலத்தின் ஊத்தாங் மெலிந்தாங்கை இணைக்கும் 2.048 கிலோமீட்டர் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும்.
பெர்ணம் ஆற்றின் மீது கட்டப்படும் இந்த பாலத்திற்கு 22 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 12 மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரித்தள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக சிலாங்கூரையும் பேராக்கையும் இணைக்கும் புதிய ஒருங்கமைப்பு உருவாக்கப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
வரும் 2025 ஆம் ஆண்டில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படும் இப்பால நிர்மாணிப்புத் திட்டத்தின் வாயிலாக தற்போதுள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்பதோடு அவ்வட்டாரத்தில் பொருளாதார நடவடிக்கைகளையும் விரிவு படுத்த இயலும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த புதிய பாலத்தை நிர்மாணிப்பதன் மூலம் சுங்கை ஆயர் தாவாரிலிருந்து பேராக் செல்வதற்கான நேரத்தை முப்பது நிமிடங்கள் வரை குறைக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
இந்த பால நிர்மாணிப்பின் வாயிலாக இவ்வட்டாரத்தில் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.