காஜாங், அக் 27– லங்காட் ஆற்றை தரம் உயர்த்தும் பணி அடுத்த மாத மத்தியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் ஆற்றை தரம் உயர்த்தும் பணி மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.
சுமார் 11 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி செலவில் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
ஆற்றை ஆழப்படுத்தும் மற்றும் கரைகளை உயர்த்தும் இப்பணியை மேற்கொள்வதன் மூலம் காஜாங் மற்றும் சுங்கை சுவா வட்டாரத்தைச் சேர்ந்த 50,000 குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சனைத் தீவு காண முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த திட்டம் நல்ல பலனைத் தருவது இப்போதே தெரியவந்துள்ளது. கடந்த வாரம் 116 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்த போதிலும் இப்பகுதியில் வெள்ளம் ஏற்படவில்லை என்றார் அவர்.
இங்குள்ள தமது சேவை மையத்தில் நடைபெற்ற இலவச இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகளை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தை அமல்படுத்துவதில் கடுமையாகப் பாடுபட்ட வடிகால் மற்றும் நீர் பாசனத் துறைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.