ECONOMYHEADERADMEDIA STATEMENT

தீபாவளியை முன்னிட்டு 150 பேருக்கு பண்டான் இண்டா தொகுதி உணவுப் பொருள் வழங்கியது

ஷா ஆலம், நவ 1- தீபாவளியை முன்னிட்டு பாண்டான் ஜெயா மற்றும் பாண்டான் இண்டா பகுதிகளைச் சேர்ந்த 150 பேருக்கு உணவுக் கூடைகளும் பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

தலா 100 வெள்ளி மதிப்பிலான அரிசி, மாவு, சீனி, உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கிய அந்த உணவுக் கூடைகள் நேற்று விநியோகம் செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த உதவிப் பொருள்களைப் பெற்றவர்களில் குறைந்த வருமானம் பெறுவோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பாண்டான் இண்டா தொகுதியைச் சேர்ந்த சுமார் 8,000 பேருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் உணவுக் கூடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

தொகுதி சேவை மையத்தின் வாயிலாக மாதந்தோறும் தலா 50 வெள்ளி மதிப்பிலான 1,000 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.

அதோடு மட்டுமின்றி  வசதி குறைந்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 500 கையடக்க கணினிகளும் 200 மடிக்கணினிகளும் தொகுதி சார்பாக விநியோகிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :