ஷா ஆலம், நவ 9– இலக்கவியல் பொருளாதாரத் துறையில் வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் ஃபிரீலான்ஸ் திட்டத்தில் சேருமாறு மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட இளையோருக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்துள்ளார்.
பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின் வொர்கானா பிளாட் பார்ம் தளத்தின் ஒத்துழைப்புத் திட்டத்தின் வழி திறன் மற்றும் வேலை சந்தையை மேம்படுத்த 5,000 பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காலத்தில் இலக்கவியல் பிரிவில் வளர்ந்து வரும் சந்தை வழி உருவாக்கப்பட்ட புதிய வேலை வாய்ப்பாக கிக் எனப்படும் பகுதி நேர பொருளாதார நடவடிக்கை உருவாக்கம் கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்தின் இம்முயற்சி சிலாங்கூர் மக்களுக்கு உரிய பயனைத் தருவதோடு வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
சிலாங்கூர் ஃபிரீலான்ஸ் பங்கேற்பாளர்கள் பகுதி நேரமாக வேலை செய்வதற்கு ஏதுவாக வொர்கானா பிளாட்ஃபார்ம் தளத்தை பயன் படுத்துவது தொடர்பில் இரு தினங்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் மாநில அரசாங்கத்திடமிருந்து 400 வெள்ளி நிதிதயுவி பெறுவார்கள்.
அத்துடன் பிளாட்ஃபார்ம் தளத்தின் மூலம் இலக்கவியல் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் அல்லது இன்னும் பணியில் சேராதவர்கள் http: //selangor.workana.com.http: /selangor.workana.com மூலம் விண்ணப்பிக்கலாம் .