கோலாலம்பூர், நவ 10- பருவ மழையை எதிர் கொள்ள ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளும் முழு தயார் நிலையில் உள்ளன. இந்நோக்கத்திற்காக தளவாடங்கள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளான தரைப்படை, ஆகாயப்படை மற்றும் கடற்படை ஆகியவை முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்பாண்டி புவாங் கூறினார்.
வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக பாதுகாப்பு படையினர் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்ட்டவர்களுக்கு உரிய உதவிகளையும் சேவைகளையும் வழங்க ஆயுதப்படை தயாராக உள்ளது. நாட்டின் எந்த பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்பாட்டாலும் அதனை எதிர்கொள்வதற்குரிய முழு தயார் நிலையில் ஆயுதப்படை வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஆயுதப்படைகளின் மூத்த உறுப்பினர்கள் சங்கம் மற்றும் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவன ஏற்பாட்டில் இங்கு நடைபெற்ற இரண்டாவது வேலை வாய்ப்பு பட்டறையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.