ஷா ஆலம், நவ 11- ஆண்டு இறுதிக்குள் 100 தொழில்முனைவோர் ஐ-லெஸ்டாரி திட்டத்தின் மூலம் பயன் பெற யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கு 51,000 வெள்ளி முதல் 100,000 வெள்ளி வரை நிதியுதவி அளிப்பதாக ஹிஜ்ரா அறவாரியத்தின் சந்தை மேம்பாட்டு நிர்வாகி முகமது ரிட்வான் அஸ்மாரா கூறினார்.
இத்திட்டத்தின் வழி இதுவரை 27 பேர் 25 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி நிதியுதவி பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விநியோக மற்றும் சேவை வணிக்கத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்
ஏற்கனவே வணிகத்தை நடத்தி வருபவர்கள், எஸ்.எஸ்.எம். எனப்படும் மலேசிய நிறுவன ஆணையத்தில் பதிவு பெற்றவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற லைசென்ஸ் பெற்றவர்கள், இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் சொன்னார்.
வணிகர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துதற்கும், கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்சி பெறுவதற்கும் இத்திட்டம் உதவும் என்றார் அவர்.
ஆர்வமுள்ளவர்கள் www.hijrahselangor.com என்ற இணையதளத்தின் மூலம் இந்த கடனுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது 20 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதியளிப்பு அதிகாரிளைத் தொடர்புகொள்ளலாம்.