ஷா ஆலம், நவ 17- நாளை வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு நடைபெறும் 2021 ஆம் ஆண்டு சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை நாட்டில் (சிப்ஸ்) 500 கண்காட்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கண்காட்சியில் 10,000 வருகையாளர்களை ஈர்க்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அதன் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவு கூறியது.
வருகையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால் இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படியும் அது கேட்டுக் கொண்டது.
இந்த கண்காட்சியில் பங்கேற்கும் வெளிநாட்டு கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சிப்ஸ் 2021 மாநாடு இம்மாதம் 18 முதல் 21 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
இந்த மாநாட்டையொட்டி வர்த்தக அகப்பக்கத்தை நிர்வகிப்பது, ஒன்பது முக்கிய நிகழ்வுகளுக்கான சந்தை மற்றும் மேம்பாட்டு பணிளை மேற்கொள்வதற்காக 1 கோடியே 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு ஹைப்ரிட் எனப்படும் பேராளர்களின் நேரடி பங்கேற்பு மூலமாகவும் இயங்கலை வாயிலாகவும் நடைபெறும்.