ஷா ஆலம், நவ 18– செர்டாங்கிலுள்ள குறைந்த நோய்த் தாக்கம் கொண்ட கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்திற்கு (பி.கே.ஆர்.சி.) நோயாளிகளைக் கொண்டுச் செல்ல ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் 10,700 பயணச் சேவைகளை வழங்கியது.
இவ்வாண்டு தொடக்கத்தில் ஆரம்பித்த இத்திட்டத்தின் வாயிலாக கடந்த 10 மாதங்களில் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
அந்த மையத்தில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் அச்சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
2022 வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு எண்டமிக் நிலையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து டிவி சிலாங்கூர் நடத்தி கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய தடங்களில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து வினவப்பட்ட போது, வரும் வரவு செலவுத் திட்டத்தில் செய்யப்படும் ஒதுக்கீட்டைப் பொறுத்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் பதிலளித்தார்.
தடங்களை அதிகரிப்பது தொடர்பில் நிறைய விண்ணப்பங்களை நாங்கள் பெற்று வருகிறோம். எனினும், அவற்றை நாங்கள் தீர ஆராய வேண்டியுள்ளது. ஸ்மார்ட் சிலாங்கூர் இலவ பஸ் சேவை போன்ற பொது போக்குவரத்து திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.