கோலாலம்பூர், நவ 20- திடலில் அத்துமீறி நுழைந்த காரணத்திற்காக கோலாலம்பூர் சிட்டி எப்.சி. கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் ஐவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வியாழன்று செராஸ் அரங்கில் சிலாங்கூர் எப்.சி. அணிக்கும் கோலாலம்பூர் எப்.சி. அணிக்கும் இடையே நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 30 வயது வரையிலான உள்நாட்டினர் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இட்சுவான் ஜாபர் கூறினார்.
கைதான ஆடவர்கள் செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையில் அவர்கள் போதைப் பொருளை பயன்படுத்தவிலை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை தேசிய விளையாட்டு மன்றம் மற்றம் மலேசிய லீக் கால்பந்து ஏற்பாட்டுக்குழுவிடம் தாங்கள் விட்டு விடுவதாக அவர் மேலும் சொன்னார்.
அப்போட்டியில் வெற்றி பெற்றதன் வழி 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பை கோலாலம்பூர் எப்.சி. குழு பெற்றதை கொண்டாடும் வகையில் அதன் ஆதரவாளர்கள் திடலில் நுழைந்தது தொடக்க க்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அவர் தெரிவித்தார்.