கோல லங்காட், நவ 20- நீர் மாசுபாடு தொடர்பான குற்றங்களைப் புரிவோர் குறித்த தகவல்களைத் தருவோருக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையின் மதிப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1999 ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத் திருத்தத்தில் இவ்விவகாரம் இடம் பெற்றுள்ளதாக லுவாஸ் இயக்குநர் ஹருள்நிஸாம் ஷாரி கூறினார்.
சுங்கை சிலாங்கூர் தாழ்நிலப் பகுதி மிகவும் விரிவானது. நீர் வளங்ளை மாசுபடுத்தும் தரப்பினர் குறித்த தகவல்களைத் தருவோருக்கு வெகுமதி வழங்கும் திட்டத்தை நாங்கள் தொடக்கியுள்ளோம் என்று அவர் சொன்னார்.
தற்போது வெகுமதி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. எனினும், அதற்கான தொகை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. வெகு விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
நீர் மாசுபாடு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து நீர் சுத்திகரிப்பு மையங்களை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து லுவாஸ் சட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருத்தம் செய்யப்பட்டது.
நீர் வளங்களை மாசுபடுத்துவோருக்கு கட்டாயச் சிறைத்தண்டனை மற்றும் வெ. 2 லட்சம் முதல் வெ.10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்க இச்சட்டத்திருத்தம் வகை செய்கிறது.