ஷா ஆலம், நவ 23- இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்கு கரை இரயில் திட்டம் மற்றும் சிலாங்கூர் அரசின் நலன் சார்ந்த இதர விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் போக்குவரத்து அமைச்சரும் நேற்று சந்திப்பு நடத்தினர்.
மக்களின் நலனுக்காக அந்த இரயில் திட்டதை தொடர்வதற்கு ஏதுவாக தீர்வுக்கான சிறந்த வழிமுறைகளை தாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
இவ்விவகாரம் மீதான ஆழமான ஆய்வுக்குப் பின்னர் இதன் தொடர்பிலான மேல் விபரங்கள் கிடைக்கபெறும் என எதிர்பார்க்கிறோம். இதன் வழி இத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள அச்சத்திற்கு தீர்வு காண முடியும் என்றார் அவர்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மாநில மற்றும் மத்திய அரசுக்குமிடையே அணுக்கமான ஒத்துழைப்பை நல்குவதற்கான தொடக்க அறிகுறியாக இந்த சந்திப்பு நிகழ்வு விளங்குவதை இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இ.சி.ஆர்.எல், இரயில் திட்டத்தை எந்த தடத்தில் செயல்பட அனுமதிப்பது என்பது குறித்து ஆண்டு இறுதியில் முடிவெடுக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் கூறியிருந்தார்.
உலு லங்காட், சிப்பாங் மற்றும் மேற்கு துறைமுகத்தை உள்ளடக்கிய தெற்கு வழித்தடத்தை தேர்ந்தெடுப்பது என்ற நிலைப்பாட்டில் மாநில அரசு உறுதியாக உள்ளதாக மாநில அரசு முன்னதாக வலியுறுத்தியிருந்த து.
தெற்கு வழித்தடத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த இரயில் திட்டத்திற்கான செலவினத்தை குறைக்க முடியும் என்பதோடு குடியிருப்பு பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அதிகம் பாதிக்கப்படாமலிருப்பதையும் உறுதி செய்ய முடியும் அது கூறியிருந்த து.