கோலாலம்பூர், நவ 23- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 20 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்துடன் நேரடியாக தொடர்புபடுத்தக்கூடிய மரணச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.
அக்காலக்கட்டத்தில் தடுப்பூசி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட 535 மரணச் சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும் சவப்பரிசோதனை மூலம் செய்யப்பட்ட உயிரிழப்பு மதிப்பீட்டின் முடிவு இதுவாகும் என்று துணை சுகாதார அமைச்சர் 11 டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் கூறினார்.
மரணங்கள் உள்ளிட்ட கடுமையானவை என வகைப்படுத்தப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் சுகாதார தரப்பினரால் விரிவாக விசாரிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
பின்னர் அந்த விசாரணை அறிக்கை மரண மதிப்பீடு அல்லது தடுப்பூசியுடன் தொடர்புடைய பக்கவிளைவுகள் மீதான கோவிட்-19 சிறப்பு மருந்தக கண்காணிப்பு குழுவிடம் (ஜே.எஃப்.கே.) சமர்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று சுங்கை பூலோ உறுப்பினர் ஆர்.சிவராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணங்கள் மற்றும் தடுப்பூசியினால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட கண்காணிப்பின் முடிவுகள் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அக்காலக்கட்டத்தில் தடுப்பூசியினால் ஏற்பட்ட பாதகமான முடிவுகள் தொடர்பில் 23,163 புகார்களை தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பின் எதிர்மறையான மருந்து எதிர்வினை கண்காணிப்பு நிறுவனம் பெற்றதாக துணையமைச்சர் சொன்னார்.