ஷா ஆலம், நவ 24– சிலாங்கூர் மாநிலத்தில் அடுத்தாண்டு நடப்புத் திட்டங்களைத் தொடர்வதற்கும் புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கும் மத்திய அரசு 175 கோடியே 60 லட்சம் வெள்ளியை வழங்கியுள்ளது.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியைக் கொண்டு செராண்டாவில் சாலையை தரம் உயர்த்துவது மற்றும் புதிய சாலையை அமைப்பது, செர்டாங் மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தஞ்சோங் காராங் மருத்துவமனையின் நிர்மாணிப்புக்கும் இந்த நிதியில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னணி பொருளாதார மையமாகவும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கும் மாநிலமாகவும் சிலாங்கூர் விளங்கும் காரணத்தால் அதிக தாக்கம் கொண்ட அடிப்படை வசதித் திட்டங்களை இங்கு மேற்கொள்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதியைக் கொண்டு சிலாங்கூர் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை அமல்படுத்தும் கடப்பாட்டை மாநில அரசு கொணடுள்ளது என்றார் அவர்.