ஷா ஆலம், நவ 29– கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு மத்தியிலும் சிலாங்கூர் மாநிலம் கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டில் சிறப்பான முதலீட்டை பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 339 கோடி வெள்ளி மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பதிவு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
ஆயினும். இவ்வாண்டில் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை எதிர்நோக்கிய போதிலும் முதல் ஆறு மாத காலத்தில் 464 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டைப் பெற்றுள்ளோம். அவற்றில் 406 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடு உள்நாட்டிலிருந்தும் 57.6 கோடி வெள்ளி முதலீடு வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டன என்றார் அவர்.
கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டிற்கான அந்நிய முதலீட்டில் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. எல்லைகள் மூடப்பட்டதால் அந்நிய முதலீடுகளுக்கு கடுமையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டில் 122 திட்டங்கள் மூலம் 5,001 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்ட வேளையில் இவ்வாண்டு 9,179 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் கோத்தா அங்கிரிக் உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்