ஷா ஆலம், நவ 30- சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டு போட்டிகளில் சம்பந்தப்பட்ட பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டாளர்களுக்கு 50 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் வழங்கியுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021 காலக்கட்டத்தில் பயிற்றுநர்களுக்கு 29 லட்சம் வெள்ளியும் விளையாட்டாளர்களுக்கு 21 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
சுக்மா போட்டிக்கான ஏற்பாடுகளில் விளையாட்டாளர்களும் பயிற்றுநர்களும் முழு ஈடுபாடு காட்டுவதை உறுதி செய்யும் நோக்கில் இத்த்தொகை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பயிற்றுநர்களுக்கு முழு நேர மற்றும் பகுதி நேர ஒப்பந்தத்தின் அடிப்படையில் அலவன்ஸ் வழங்கப்பட்ட வேளையில் விளையாட்டாளர்களுக்கு அவர்களின் வருகையைப் பொறுத்து தொகை வழங்கப்பட்டது என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ மேய் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். சுக்மா போட்டிக்கான மாநில அணியின் ஏற்பாடுகள் குறித்து லிம் கேள்வியெழுப்பியிருந்தார்.
பொது முடக்க காலத்தில் பயிற்றுநர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறு இயங்கலை வாயிலாக பயிற்சிகளை வழங்கி வந்ததாக கைருடின் சொன்னார்.
எனினும் நவம்பர் மாதம் முதல் விளையாட்டாளர்கள் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பின்பற்றி நேரடி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.