ஷா ஆலம், நவ 30- சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தால் (எம்.பி.ஐ.) நிர்வகிக்கப்படும் “கெர்பாங் மெரிடிம் சிலாங்கூர்“ எனும் சிலாங்கூர் கடல் நுழைவாயில் (எஸ்.எம்.ஜி.) திட்டத்தில் ஐந்து பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நெஸ்லே (மலேசியா) பெர்ஹா, வெஸ்ட் போர்ட் மலேசியா சென். பெர்ஹாட், டச்லேடி மில்க் இண்டஸ்ட்ரிஸ், பெர்ஜெயா லேண்ட் பெர்ஹாட் மற்றும் ஓஷியன் கிளீன்ஆப் ஆகியவையே அந்த ஐந்து நிறுனங்களாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சம்பந்தப்பட்ட ஐந்து நிறுவனங்களுடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வாயிலாக கிள்ளான் ஆற்றின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்யும் சிலாங்கூர் அரசின் முயற்சியை நனவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
கிள்ளான் ஆற்றை சுத்தப்படுத்துவது மற்றும் கிள்ளான் ஆற்றின் 56 கிலோ மீட்டர் நெடுகிலும் உள்ள பகுதியை தரம் உயர்த்துவது மட்டும் இந்த எஸ்.எம்.ஜி. திட்டத்தின் நோக்கமல்ல. மாறாக சுற்றுச்சூழலின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் 600 ஏக்கர் நிலத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் சொன்னார்.
இதன் வாயிலாக சதுப்பு நில தாவர வகைகளை நடுவதன் மூலம் பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்வது, ஆற்றை சுத்தம் செய்வது, எஸ்.எம்.ஜி. திட்டத்தின் வழி சேகரிக்கப்படும் நெகிழி குப்பைகளை மறுசுழற்சி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என்று மாநில சட்டமன்றத்தில் நேற்று அவர் தெரிவித்தார்