ஷா ஆலம், டிச 1- பண்டமாரான் மற்றும் கோலக் கிள்ளான் பகுதிகளுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கு முன்னர் அதன் தொடர்பான பல்வேறு அம்சங்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் ஆராயும்.
இந்த இலவச பஸ் சேவைத் திட்டத்திற்கான செலவுகளை ஊராட்சி மன்றங்களே ஏற்றுக் கொள்வதால் இச்சேவையை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் பராமரிப்பு செலவு குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
இச்சேவை வழங்கப்படும் தடங்களில் உள்ள நிறுத்தங்களின் எண்ணிக்கை மற்றும் பயண தொலைவு உள்ளிட்ட அம்சங்கள் மீது கிள்ளான் நகராண்மைக் கழகம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருவதாக மாநில சட்டமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.
பண்டமாரான் மற்றும் கோலக்கிள்ளான் ஆகிய பகுதிகளுக்கு எப்போது ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை தொடரப்படும் என்று பண்டமாரான் தொகுதி உறுப்பினர் டோனி லியோங் தக் சீ கேள்வியெழுப்பியிருந்தார்.
தற்போது, கிள்ளான் நகரிலிருந்து பண்டமாரான் விளையாட்டுத் தொகுதி வரை இலவச பஸ் சேவை வழங்கப்படுவதாக இங் கூறினார்.