ஷா ஆலம், டிச 7- சிலாங்கூர் மாநில சிறப்பு டிரோன் மையமாக சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் (யுனிசெல்) பெஸ்தாரி ஜெயா வளாகத்தை உருவாக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
டிரோன் சாதன மேம்பாட்டு மற்றும் ஆய்வு தொழில்நுட்பம், தயாரிப்பு, பயிற்சி மற்றும் சோதனை மையமாக செயல்படுவதற்குரிய வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
ஏரோடைன் குழுமம், பான் ஏவியேஷன் சென். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்கள் இத்திட்டதின் முக்கிய பங்களிப்பை வழங்கும். இந்நிறுவனங்கள் வான் போக்குவரத்து ஆலோசக சேவையில் சிறந்து விளங்குவதோடு இத்துறையில் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளன என்றார் அவர்.
டிரோன் துறைமுகத்தை உருவாக்குவது மற்றும் பொருள்களை டிரோன் சாதனம் வழி கொண்டுச் செல்வதற்கான பாதுகாப்பான வான் தடத்தை உறுதி செய்வது போன்ற விஷயங்களில் மாநில அரசு ஒழுங்கு முறை அமைப்புகளுடன் ஒத்துழைப்பு நல்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
பறக்கும் கார்கள், டிரோன் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பம் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீட்டாளர்களை கவர்வதற்கான வாய்ப்பு குறித்து லாவ் அவையில் கேள்வியெழுப்பியிருந்தார்.
சிலாங்கூர் சிறப்பு டிரோன் மையத்தின் சீராக செயல்பாட்டை உறுதி செய்வதற்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் செலாத்தி எனும் சிலாங்கூர் வான் போக்குவரத்து மற்றும் புத்தாக்க தொழிநுட்ப நிறுவனத்தை அமைத்துள்ளதாகவும் டத்தோ தெங் சொன்னார்.