ஷா ஆலம், டிச 7- கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தின் (சி.ஏ.சி.) திட்ட நிர்வாகத்தைத் தொடரவும் வலுப்படுத்தவும் 1 கோடியே 7 லட்சம் வெள்ளியை ஒதுக்குவதற்கு மாநில ஆட்சிக்குழு குழு ஒப்புதல் அளித்துள்ளது. செலங்கா செயலி வாயிலாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள நோயாளிகளைக் கண்காணிப்பதற்கும் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று மந்திரி பசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். ஓமிக்ரோன் புதிய வகை நோய்த் தொற்று பரவலால் கோவிட்-19 அதிகரிக்கும் சாத்தியத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தயார் நிலையில் இருப்பதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். "இத்தகைய சிக்கல்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 988 வெள்ளி மதிப்புள்ள மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் ஆக்சிமீட்டர்கள் போன்ற சாதனங்களை சி.ஏ.சி. மையங்களுக்கு சிலாங்கூர் சுகாதார இலாகா மூலம் மாநில அரசாங்கம் நன்கொடையாக வழங்கும், என்று அவர் தெரிவித்தார். இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இதற்கிடையில், நவம்பர் 26 ஆம் தேதி வரை 618,980 நோயாளிகளை சம்பந்தப்படுத்திய கண்காணிப்பு பதிவுகள் செலங்கா செயலி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலக்கட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபோது உடல்நிலை மோசமடைந்த 38,809 நோயாளிகள் செலங்கா செயலி மூலம் அடையாளம் காணப்பட்டனர் என்று அவர் கூறினார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/11/MB-reporters-PSX_20211108_104715-1-960x639.jpg)