ஷா ஆலம், டிச 9- சிலாங்கூர் மக்களிடையே நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கும் நோக்கில் 157,000 ஊக்கத் தடுப்பூசிகளை இலவசமாக விநியோகிக்கும் மாநில அரசின் நடவடிக்கையை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.
“வேக்சின் சிலாங்கூர் (செல்வேக்ஸ்) பூஸ்டர்“ திட்டத்தின் வாயிலாக மாநில அரசு மேற்கொள்ளும் இந்நடவடிக்கையை இதர மாநிலங்களும் கூட்டரசு நிலையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவருமான அவர் வலியுறுத்தினார்.
மக்களிடையே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பது நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதே சமயம், நாடு மீட்சி நிலையை அடைவதற்கு ஏதுவாக நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.
மாநிலத்திலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் செல்கேர் கிளினிக்குகளில் வழங்கப்படும் இந்த இலவச தடுப்பூசி சேவையைப் விரைந்து பெறும்படி போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.
செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் மாநில மக்களுக்கு 157,000 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறியிருந்தார்.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள 16 செல்கேர் கிளினிக்குகளில் ஊக்கத் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.