ஷா ஆலம், டிச 10- மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்ட பட்டியலில் கூடுதலாக பொருள்களைக் சேர்க்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவின் கண்காணிப்பில் உள்ள தேவை மிகுந்த பொருள்கள் அந்த பட்டியலில் சேர்க்கப்படும் என்று ஹலால் உணவுத் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
பயனீட்டாளர் மத்தியில் தேவை அதிகம் உள்ள பொருள்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அப்பொருள்களின் விலை உயரும் பட்சத்தில் அவற்றை உச்ச வரம்பு விலைப்பட்டியலில் சேர்ப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பரிந்துரையைத் தாங்கள் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளதாக நேற்று இங்கு டாருள் ஏசான் ஹாலால் சூரி திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
நடப்புச் சூழலுக்கு ஏற்பட் இந்த திட்டத்தின் கால வரம்பை அதிகரிப்பது குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாக கூறிய அவர், பொருள்கள் அதிக விலையில் விற்கப்படுவது தொடர்பில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சிடம் புகார் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.
பொருள்களின் விலையை குறிப்பாக பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் கண்காணித்து வருவோம். அக்காலக் கட்டத்தில்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம் காணும் என்றார் அவர்.
மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்டம் நாடு முழுவதும் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகர அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.