கிள்ளான், டிச 11 – சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள 637 பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக மொத்தம் 2 கோடியே 32 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு தேசிய மாதிரி ஆரம்ப சீனப் பள்ளிகள், தேசிய சீன இடைநிலைப் பள்ளிகள், தேசிய மாதிரி ஆரம்ப தமிழ்ப் பள்ளிகள், முபாலிக் பள்ளிகள் மற்றும் சமயப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மானியம் இணைய பரிபாற்றம் வாயிலாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் கணக்கில் சேர்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டு பள்ளியின் தேவைகளின் அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார். இன்று இங்குள்ள பிங் வா பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 137 சீன ஆரம்ப, இடைநிலை பள்ளிகளுக்கு 90 லட்சம் வெள்ளி மானியத்தை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். கோவிட்-19 பெருந் தொற்றை எதிர் நோக்கிய போதும் மாநிலத்தில் கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கான உதவித் திட்டஙகள் தொடரப்படும் என்றும் அமிருடீன் குறிப்பிட்டார்.