கோலாலம்பூர், டிச 15- மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் கீழுள்ள விமான நிலையங்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதம் 23 லட்சமாக உயர்வு கண்டது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் 20 லட்சம் பயணிகள் எண்ணிக்கையை தாண்டியது இதுவே முதன் முறையாகும்.
கடந்த அக்டோபர் மாதம் 13 லட்சமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த மாதம் 77 விழுக்காடு உயர்வு கண்டதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ இஸ்கந்தார் மிஸால் மாமூட் கூறினார்.
இந்த எண்ணிக்கை உயர்வுக்கு உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. மாநில எல்லைகளைக் கடப்பதற்கான தடை அகற்றப்பட்டது முதல் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அவர் சொன்னார்.
மலேசியாவிலுள்ள விமான நிலையங்களை கடந்த மாதம் 21 லட்சத்து 50 உள்நாட்டு பயணிகள் பயன்படுத்தினர். அதற்கு முந்தைய மாதத்தில் பதிவான 11 லட்சத்து 80 ஆயிரம் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இது 82 விழுக்காடு அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த இரு மாதங்களாக அதிகரிப்பை கண்டு வரும் உள்நாட்டு விமானச் சேவைக்கான வரவேற்பு விமான நிறுவனங்களுக்கு மட்டுமின்றி சில்லறை விற்பனை, உணவு மற்றும் பான விற்பனையில் ஈடுபட்டு வரும் எங்களின் வர்த்தக பங்காளிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சிறிது சிறிதாக மேம்பாடு கண்டு வருவதை இது காட்டுகிறது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.