கோத்தா பாரு, டிச 15- மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் 12 வகையான பொருள்களின் விலை இறக்கம் கண்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருள்கள் சந்தையில் தாராளமாக கிடைப்பது மற்றும் அப்பொருள்கள் சில்லரை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பது ஆகிய காரணங்களால் அப்பொருள்கள் விலை இறக்கம் கண்டுள்ளதாக அமைச்சின் அமலாக்க பிரிவின் (தடுப்பு) பிரிவு துணை இயக்குநர் அரிஸ் மாமாட் கூறினார்.
முன்பு கோழிகள் அதிக விலையில் விற்கப்பட்டு வந்தன. ஆனால் மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்டத்தின் கீழ் கோழிகளுக்கான விலையை கிலோ ஒன்றுக்கு வெ. 9.30 ஆக நிர்ணயித்துள்ள போதிலும் சந்தையில் அவை வெ.7.90 என்ற விலையில் மட்டுமே விற்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர, முட்டைக் கோசு, பயிற்றங்காய் போன்ற காய்கறிகளின் விலை 15 முதல் 30 விழுக்காடு வரை குறைந்துள்ளது என்று இங்குள்ள பாசார் சிட்டி கத்திஜாவில் பொருள்களின் விலையை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்டத்தை பெரும்பாலான வியபாரிகள் பின்பற்றி நடப்பது அமலாக்க சோதனைகளில் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.