ஷா ஆலம், டிச 16- செமினி ஆற்றில் நேற்று காலை டீசல் எண்ணெய் வாடை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங், புத்ரா ஜெயா மற்றும் கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் உள்ள 463 இடங்களில் அட்டவணையிடப்படாத நீதி விநியோகத் தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் தூய்மைக்கேடு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக சிலாங்கூர் நிர்வாக வாரியம் செமினி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் சோதனை மேற்கொண்டு வருவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக தாங்கள் 81 லோரிகளை தயார் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
பொதுமக்களுக்கு குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று பரவியுள்ள தற்போதைய சூழலில் சுத்தமான நீர் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
நீர் விநியோகத் தடை தொடர்பான சமீபத்திய நிலவரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் டிவிட்டர், இண்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.