ஷா ஆலம், டிச 16- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 637 தமிழ், சீன மற்றும் சமயப் பள்ளிகளுக்கு 2 கோடியே 32 லட்சம் வெள்ளியை மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளதை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார்.
இந்த மானியம் மூலம் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 637 தமிழ், சீன, முபாலிக் மற்றும் மக்கள் சமயப் பள்ளிகளுக்கு 2 கோடியே 32 லட்சம் வெள்ளி மானியமாக வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 26 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது வெளியிட்டிருந்தார்.
மந்திரி புசாரின் இந்த அறிவிப்பு தொடர்பில் கருத்துரைத்த போது இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் இவ்வாறு தெரிவித்தார்.
மாநில அரசின் இந்த ஒதுக்கீட்டில் 50 லட்சம் வெள்ளி மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.