ஷா ஆலம், டிச 16– செமினி ஆற்றில் டீசல் வாடை எழுந்ததைத் தொடர்ந்து பணி நிறுத்தம் செய்யப்பட்ட சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
நீரில் கலந்துள்ள வாடையை கண்டறியும் டோன் அளவீடு சுழியத்தை பதிவு செய்ததைத் தொடர்ந்து இன்று நண்பகல் 12.00 மணியளவில் அந்த சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நீர் மாசுபாடு பிரச்சனையை துரிதமாக கையாண்ட லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு தாம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
இந்த நீர் மாசுபாடு பிரச்சனைக்கு நான்கே மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டது என்று தனது டிவிட்டர் பதிவில் மந்திரி புசார் குறிப்பிட்டுள்ளார்.
செமினி ஆற்றில் நேற்று காலை டீசல் வாடை உணரப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனால் ஐந்து மாவட்டங்களில் உள்ள 463 இடங்களில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.