ஷா ஆலம், டிச 23 -சிலாங்கூரில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள ஆறுகளுக்கு செல்வதிலிருந்து விலகியிருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீர்த் தேக்கங்களில் நீரின் கொள்ளளவும் நீரோட்டமும் அதிகரித்ததைத் தொடர்ந்து அணைகளில் இருந்து நீர் நிரம்பி வெளியேறும் சாத்தியம் உள்ளதாக அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய அடிப்படைத் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் இன்று ஒரு அறிக்கையில் கூறினார். எனினும், ஆற்றில் நீர் பெருக்கு குறைவாக இருக்கும் என்று கணிக்கப்படுவதாக கூறிய அவர், அணைக்கட்டுகளில் நீரின் கொள்ளளவு அதிகபட்ச அளவை எட்டும்போது நீர்த்தேக்கத்தில் உள்ள உபரி நீர் அருகில் உள்ள ஆறுகள் வழியாக வெளியேற்றப்படும் என்று சொன்னார். நீரை வெளியேற்றும் பணியின் போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்படும் விளக்கினார். நீர்த்தேக்கத்தில் நீரை வெளியேற்றும் நடைமுறை டிரா ஆஃப் டவர் அல்லது ரேடியல் கேட் மூலம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படும் என்றார் அவர். ஆற்றின் வேகமான நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அணைக்கட்டின் கட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். சிலாங்கூரில் ஏழு நீர்த் தேக்கங்கள் உள்ளன. சுங்கை சிலாங்கூர் நீர்தேக்கம், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் சுங்கை திங்கி அணைக்கட்டு, பெட்டாலிங் மாவட்டத்தில் தாசேக் சுபாங் அணை, உலு லங்காட்டில் சுங்கை லங்காட் அணை மற்றும் சுங்கை செமினி அணை மற்றும் சுங்கை லாபு ஆற்றின் சேமிப்புப் பகுதியில் (ஒ.ஆர்.எஸ்.) ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தால் இயக்கப்படும் நீர் சேகரிப்பு குளம் ஆகியவையே அவையாகும்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/12/Screenshot_20211219_020241-960x601.jpg)