ஷா ஆலம், டிச 24- வெள்ளம் வடிந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கிள்ளான், பெட்டாலிங், ஷா ஆலம், உலு லங்காட் ஆகிய பகுதிகளில் இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளம் வடிந்த பகுதிகளில் சுத்தம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது. புக்கிட் சங்காங் மற்றும் கோல சிலாங்கூரில் இன்னும் நீர் வடியவில்லை. இன்று மாலைக்குள் அங்கு நிலைமை சீரடையும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் முழுமை பெற இரண்டு வாரங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமா வானொலிக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக அவர் கூறினார்.
துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க் கிழமை 30,000 ஆக இருந்தது. இன்று அந்த எண்ணிக்கை 18,000 ஆக குறைந்துள்ளது என்றார் அவர்.