ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வெ. 200,000 மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவிகளை ராஜா மூடா பெற்றுக் கொண்டார்

ஷா ஆலம், டிச 25- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக லாவ் கெக் போ அறவாரியம் வழங்கிய 2 லட்சம் வெள்ளி மதிப்பிலான உதவிப் பொருள்களை மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா பெற்றுக் கொண்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்யும் உபகரணங்களை வாங்குவதில் லாவ் கெக் போ அறவாரியமும் ராஜா மூடா துங்கு அமீர் ஷா புரவலராக இருக்கும் சேய் எனப்படும் சிலாங்கூர் இளைஞர் அமைப்பும் இணைந்து செயல்படும் என சிலாங்கூர் அரச அலுவலகம் கூறியது.

மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது முதல் ராஜா மூடா மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா பள்ளிவாசலில் தங்கியுள்ளவர்களை  அவர் சென்று கண்டு உதவிகளை வழங்கினார்.

அதோடு மட்டுமின்றி அவர் பேரங்காடிக்கு நேரில்  சென்று பொருள்களை வாங்கி செக்சன் 16 மற்றும் தாமான் மேரு ஜெயாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி உதவினார்.

மேலும், கம்போங் பாரு ஐக்கோமில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் அவர் ஈடுபட்டதோடு பாடாங் ஜாவா மற்றும் தெலுக் பங்ளிமா காராங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருள்களையும் ஒப்படைத்தார்.


Pengarang :