ஷா ஆலம், டிச 28- உலு லங்காட் பகுதியில் நேற்று ஏற்பட்ட வெள்ளத்திற்கு அருகிலுள்ள மலைகளின் உச்சியில் தேங்கிய நீர் தரைப் பகுதி நோக்கி அதிவிரைவாக வழிந்தோடியதே காரணம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வேகமான நீரோட்டத்தில் குப்பைகளும் மரங்களும் அடித்து வரப்பட்டு சுங்கை லுய் 14 மைல் வரையிலான பகுதியை சூழ்ந்ததாக நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைப் போல் கிழக்கு கரை நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பணிகள் இந்த வெள்ளத்திற்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தும் எந்த தகவலையும் தாம் இதுவரை பெறவில்லை என்று அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், கோல சிலாங்கூர் கம்போங் அசகான் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதற்கு அங்கு மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலைத் திட்டம் காரணமாக இருந்ததை அமிருடின் உறுதிப்படுத்தினார்.
அந்த கிராமத்தில் உள்ள தடுப்பணை ஊடாகச் செல்லும் அந்த நெடுஞ்சாலைத் திட்டம் காரணமாக கம்போங் அசகான் பகுதியில் நேற்று முன்தினம் முதல் நீர் பெருக்கெடுத்துள்ளது. தற்போது அங்கு பெருமளவிலான நீர் வெளியேற்றப்பட்டுவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.