புத்ரா ஜெயா, டிச 30– எரிசக்தி திறன் நிலையான அடைவுநிலை (சேவ்) திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மின்சாரப் பொருட்களை வாங்குவதற்கு 500 வெள்ளி கழிவு வழங்கப்படும்.
வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுவதாக எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ தகியுடீன் ஹாசன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வளாகங்கள் அல்லது இ-காமர்ஸ் எனப்படும் மின்-வணிகத் தளங்களில் மின்சாரப் பொருட்களை வாங்குவதற்காக 500 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சேவ் திட்டத்தில் பதிந்து கொண்ட இ-காமர்ஸ் எனப்படும் மின் வணிகத் தளங்களான லாசாடா, ஷாப்பி மற்றும் பிஜிமால் ஆகியவற்றில் மின்சாரப் பொருட்களை வாங்கலாம் என்றார் அவர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த மாநிலத்தில் இருந்தாலும், தகுதியிருந்தால் ஒவ்வொரு கொள்முதலுக்கும் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு 1,000 மதிப்புள்ள பொருட்களுக்கு 500 வெள்ளி மட்டுமே செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது, செடா எனப்படும் நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 1,400 சேவ் வளாகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள வளாகங்களில் வாங்குவதை எளிதாக்கும் வகையில் இந்த வளாகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதுவரை இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு 80,000 தகுதியுள்ள குடும்பங்கள் இருப்பதாக தரவுகள் காட்டுகின்றன, மேலும் எண்ணிக்கை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
வெள்ளத்தால்பாதிக்கப்பட்டவர்கள் இத்திட்டத்தில் பொருள்களை வாங்குவதற்கு வசதியாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) சரிபார்ப்பு ஆவணங்களை வழங்கும் என்றார் அவர்.