கோலாலம்பூர், டிச 30– ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை முழு தயார் நிலையில் உள்ளது.
மொத்தம் 2,817 தீயணைப்பு வீரர்கள், 628 உதவி தீயணைப்பு வீரர்கள், 2,080 தன்னார்வலர் தீயணைப்பாளர்களை உள்ளடக்கிய 5,525 பேர் தயார் நிலையில் உள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரிசால் மரைக்கான் நைனா மரைக்கான கூறினார்.
தீயணைப்பு வீரர்கள், சாதனங்கள் மற்றும் தளவாடங்கள் உள்பட அனைத்து நிலையிலும் முன்னேற்பாடாக இருக்கும்படி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று பேஸ்புக் மூலம் வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார்.
ஜொகூரின் மெர்சிங் ஆற்றோரம் நெடுகிலும் உள்ள 33 நிலையங்களைச் சேர்ந்த 1,889 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களும் சுங்கை பகாங் மற்றும் சுங்கை ரொம்பின் நெடுகிலும் 26 நிலையங்களில் உள்ள 1,660 தீயணைப்பு வீரர்களும் வெள்ளதை எதிர் கொள்ள தயாராக இருக்கும்படி பணிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.