உலு லங்காட், டிச 30– உலு லங்காட் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உலு லங்காட் விளங்குவதாக கூறிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அதனை அடுத்து ஸ்ரீ மூடா மற்றும் சுபாங் ஜெயாவின் புக்கிட் லஞ்சோங் ஆகிய பகுதிகள் உள்ளன என்று சொன்னார்.
அதிகப்பட்ச சேதம் மற்றும் அடர்த்தியான மக்கள் தொகையின் அடிப்படையில் உலு லங்காட் மாவட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மற்ற இடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், உலு லங்காட் அளவுக்கு அவை மோசமான பாதிப்பை எதிர்நோக்கவில்லை என்றார் அவர்
இங்குள்ள தாமான் ஸ்ரீ நண்டிங் பகுதியில் மேற்கொள்ளப்படும் துப்பரவுப் பணிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் மற்றும் கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வெய் ஆகியோரும் உடனிருந்தனர்.
தற்போது துப்புரவுப் பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு குப்பைகளை அகற்றும் பணி முன்பை விட வேகமாக மேற்கொள்ளப்படுகிறது என்று அமிருடின் சொன்னார்.
குப்பை சேகரிப்பு நிலையங்களை உருவாக்கும் வியூகம் நல்ல பலனைத் தந்துள்ளதாக கூறிய அவர், இதன் மூலம் அதிகமான குப்பைகளை விரைவாக அகற்ற முடிவதாகச் சொன்னார்.