ஷா ஆலம், டிச 31– வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசினால் தொடங்கப்பட்ட சிலாங்கூர் பங்கிட் எனும் எழுச்சித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 2,258 குடும்பத்தினர் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.
இந்த 1,000 வெள்ளி பகிர்ந்தளிப்பு திட்டத்தின் வழி இதுவரை வழங்கப்பட்ட தொகையின் மதிப்பு 22 லட்சத்து 58 ஆயிரம் வெள்ளியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இது தவிர, வெள்ளத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் மூலம் 2021 டிசம்பர் 30 ஆம் தேதி வரை 2,258 குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஒப்படைக்கப்பட்ட மொத்த தொகை 22 லட்சத்து 58 ஆயிரம் வெள்ளியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இரு வாரங்களுக்கு முன்னர் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு சிலாங்கூர் பங்கிட் எனும் எழுச்சி திட்டத்திற்காக 10 கோடி வெள்ளியை ஒதுக்கியது.
பழுதடைந்த அடிப்படை வசதிகளை சீரமைப்பது தவிர்த்து வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.