பந்திங், ஜன 1 - டிங்கிலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியை வழங்கும் பணியின் முதல் கட்டம் செவ்வாய்கிழமை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தங்கிருந்த 700 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிலாங்கூர் பாங்கிட் திட்டத்தின் கீழ் கடந்த வியாழனன்று உதவித் தொகை வழங்கப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பு அதிகாரி ஹமிடி ஏ ஹாசன் தெரிவித்தார். உதவித் தொகை மூன்று கட்டங்களாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 5,000 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயனடையும். தற்காலிக நிவாரண மையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை முதல் கட்டமாக உதவித் தொகை விநியோகிக்கப்பட்டது என்றார் அவர். வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம் பெயராதவர்கள் மீது இரண்டாம் கட்டத்தில் கவனம் செலுத்தப்படும். மூன்றாம் கட்டத்தில் இதன் தொடர்பான இதர கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை தாங்கள் பெற்று வருவதாகக் கூறிய அவர், கிராமத் தலைவர்கள் மற்றும் சமூக சேவை மைய அலுவலகம் மூலம் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.