உலு லங்காட், ஜன 1- டுசுன் துவா தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கும் பணி வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்குள் முற்றுப் பெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எர்டி பைசால் எடி யூசுப் கூறினார்.
வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீட்டுத் தளவாடம் உள்ளிட்ட பொருள்களை பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து வாங்குவதற்கு ஏதுவாக இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை கிராமத் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர் சங்கத் தலைவர்கள் சேகரித்து வருவதாகவும் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக இந்த தகவல்கள் உலு லங்காட் மாவட்ட நில அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நடப்புச் சூழலில் மக்களுக்கு உடனடியாக நிதியுதவி தேவைப்படுகிறது. அதனைத் கருத்தில் கொண்டு ஜனவரி 8 ஆம் தேதிக்குள் நிதியை ஒப்படைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பணி முற்றுப் பெற்று விட்டது. அந்த பேரிடரின் போது நிவாரண மையங்கள் தவிர்த்து வேறு இடங்களில் தங்கியிருந்தவர்கள் மீது தற்போது கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.