ஷா ஆலம், ஜன 4– உலு லங்காட் மாவட்டத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் பணியை எளிதாக்குவதற்கு ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்படும் என்று மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் தன்னார்வலர்கள் மற்றும் இதர தரப்பினரின் வருகை அதிகமாக இருந்த போதிலும் அங்கு குப்பைகளை அகற்றும் பணி சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
பணிகள் முறையாகவும் ஓழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பினை அந்த ஒருங்கிணைப்பு குழு ஏற்கும். உதாரணத்திற்கு போலீசார் போக்குவரத்து சீராக உள்ளதை உறுதி செய்யும் அதே வேளையில் ஊராட்சி மன்றங்கள் காலியாக உள்ள இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதி வழங்கும் என்றார் அவர்.
அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் நமக்கு பேருதவியாக இருக்கும். அதை விடுத்து எல்லா பொறுப்புகளும் நம்மிடமே ஒப்படைக்கப்பட்டால் குப்பைகளை அகற்றும் பணியில் சுணக்கம் ஏற்படும் என்று அவர் சொன்னர்.
கோலாலம்பூருக்கு அருகில் உலு லங்காட் அமைந்துள்ளதால் கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் அலாம் புளோரா உள்ளிட்ட தரப்பினர் துப்புரவுப் பணியில் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உலு லங்காட் பகுதியில் துப்புரவு மற்றும் உதவிப் பொருள் பகிர்ந்தளிப்பு உள்பட வெள்ளத்திற்கு பிந்தை மீட்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான தலைமையில் குழு ஒன்றை சிலாங்கூர் அரசு கடந்த மாதம் 24 ஆம் தேதி அமைத்தது.