ஷா ஆலம், ஜன 5- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பேரிடரின் தாக்கத்திலிருந்து விடுபட்டு புதிய வாழ்க்கைக்கு தயார் படுத்திக் கொள்வதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு மேற்கொள்ளும்
பாதுகாப்பு, மருத்துவம், குடியிருப்புகளை சீரமைப்பது, துப்புரப் பணி மற்றும் நிதியுதவி என அனைத்து கோணங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.
அடுத்த வாரம் பள்ளித் தவணை தொடங்கவுள்ளதால் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இன்னும் சிறிது காலத்தில் நாம் நோன்பு மற்றும் ஹரிராயா பெருநாளை கொண்டாடவுள்ளோம். ஆகவே, பல்வேறு ரூபங்களில் மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
உதவித் தொகைக்கான விண்ணப்ப முறையும் எளிதாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் கிராமத் தலைவர் அல்லது சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்தைப் பெற்றால் மட்டும் போதுமானது என்றார்.