ஷா ஆலம், ஜன 5- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் வெள்ள உதவித் திட்டத்திற்கான 800 பேரின் மனுக்கள் மாவட்ட நில அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.
இத்தொகுதியைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் இதுவரை 1,000 வெள்ளி நிவாரண நிதியைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த உதவித் தொகைக்கு இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் ஸ்ரீ ஜூக்ரா கிராம சமூக நிர்வாக மன்றம் மற்றும் பாயாய் பெங்குளு மோரிப் கிளானாங் ஆகிய இடங்களில் உள்ள பதிவு மையங்களுக்கு சென்று பதிந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பதிவு மையம் இம்மாதம் 31 ஆம் தேதி வரை திறந்திருக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு சென்று தங்கள் மனு மீதான நிலவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
பாலாய் ராயா கம்போங் பந்திங் மற்றும் கம்போங் கிளானாங் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களை சென்று கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் வெள்ளத்தால் சேதமடைந்த அடிப்டை வசதிகளை சரி செய்வதற்காகவும் மாநில அரசு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.